தொன்னூறின் ஆரம்பம். இந்திய இராணுவம் வெளியேறிய காலப் பகுதி. யாழ்ப்பாணத்தின் சிற்சில இடங்களில், இறந்த இந்திய இராணுவ வீரர்களது நினைவு நடுகற்களை, அவர்கள் அமைத்திருந்தார்கள். இராணுவம் ஊர்களை விட்டுக் கிளம்பவும் அராலி என்னும் இடத்தில் பொதுமக்களில் சிலர், அலவாங்கு போன்ற ஆயுதங்களுடன் இந்திய இராணுவ நடுகற்களை நோக்கிக் கிளம்பி விடுகின்றனர். செய்தியறிந்த புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர், போராளிகள் உடனடியாக அங்கு விரைகின்றனர். கல்லறைகளில் கை வைச்சால்.. வைச்சவையின் கையைக் காலை முறிப்பம் என எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடப் படுகிறது. புறுபறுத்துக் கொண்டே சனம் கலைந்து போகிறது.
95 இன் இறுதி வரை அவ் நினைவு நடுகற்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தன. அதன் பின்னர் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப் பட்ட பிறகு, என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் நினைவு நடுகற்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியும்.
000
90 களின் இறுதியில்த் தான் புலிகள் சாவடைந்த தமது அனைத்து போராளிகளையும், புதைகுழிகளில் விதைப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள். அதுவரை காலமும் போராளிகள் சார்ந்த, மத அனுட்டான முறையில் அவர்களது இறுதிப் பயணம் அமையப் பெற்றிருந்தது. பின்னைய முடிவு, புலம்பெயர்ந்த தேசத்திற்கும் முள் முருக்கையை விமானத்தில் இறக்குமதி செய்து திருமண மேடையில் சாடிக்குள் வைக்கும், மத அனுட்டானங்களால் இறுகக் கட்டிப் பிணைக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் ஆரம்ப முணுமுணுப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் காலப் போக்கில் சமூகம் இயல்பாக அதை ஏற்றுக் கொண்டது. அதுமட்டுமல்லாது இறந்தவர்களை புதைக்கும் இடமென்பது அச்சத்துக்குரியது, ஒதுக்குதற்குரியது என்ற சமூகத் தளைகள் கட்டவிழ்ந்து மாவீரர் துயிலும் இல்லமென்பது போற்றுதற்குரிய புனிதப் பிரதேசம் என்ற எண்ணம் எல்லோர் மத்தியிலும் வலுப்பெறத் தொடங்கியது. இங்கே என் நடு நிலைமையைப் பேணுகிறேன் என்ற பெயரில் கூட, அவற்றை மயானங்கள் என அழைக்க முடியாத மனத் தடை எனக்கு உண்டு. புலிகளை எதிர்நிலையில் திட்டுகிறவர்கள் கூட, தனது மரணம், தான் சார்ந்த இனத்திற்கு விடுதலையைத் தரும் எனும் நம்பிக்கையில் உயிர் விதைத்தவர்கள் குறித்து, வக்கிரம் மிக்க புரிதலைக் கொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
சமூக சமய அனுட்டானங்கள் குறித்த பார்வையைத் தாண்டி, இன்னொரு விதத்தில் புலிகளின் நினைவு நடுகற்கள் குறித்த சில கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதாவது இவ்வாறான துயிலுமில்லங்கள் எதிரிகளின் கைகளில் சிக்கும் வேளையில், அவர்கள் தமது பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்களின் இறுதி உறக்கத்தை குலைக்கும் நாசகார செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதும், அது மாறாத மன வடுவை காலம் காலமாக ஏற்படுத்தி விடும் என்பதுவும் அத்தகைய கருத்துக்களாக இருந்தன.
இது குறித்து புலிகள் நீண்ட விளக்கமொன்றை அக்காலத்தில் அளித்தனர். உலக இராணுவ வரலாறுகளில் எதிரிகளின் நினைவுக் கல்லறைகள் கவனமாகப் பேணப்பட்டன என்ற உதாரணங்களோடு உலகளாவிய இராணுவ ஒழுக்கம் அத்தகைய நாசகார செயல்களில் ஈடுபடா வண்ணம் தடுக்கும் என புலிகள் கணித்தனர். ஆனால் புலிகளின் கணிப்புப் பொய்த்துப் போனது.
95 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கை இராணுவப் படைகள், அங்கிருந்த துயிலும் இல்லங்களை புல்டோசர் கொண்டு தகர்த்தழித்தனர். வயலுக்கு நிலம் உழுவது போல அவை உழுது கிளறப் பட்டன. தம் பிள்ளைகள் உறங்குகிறார்கள் என்ற ஒரு உணர்வு மயம் மிக்க, ஆத்மார்த்தமான, தாய்களின் தகப்பன்களின் நம்பிக்கைகளை குத்திக் கிளறி மாறாத ரணத்தை தந்தன இலங்கை அரச படைகள். இவர்களே இப்போது உயிரோடிருப்பவர்களுக்கு விடுதலை தருகிறார்களாம்.
000
யாழ்ப்பாண நகர பகுதிகளில் அறிஞர்கள் சமயப் பெரியோர்கள் எனப் பலரது சிலைகள் உண்டு. யாழ்ப்பாணத்து கோட்டையிலிருந்து வெடித்த குண்டுகள், பல சிலைகளின் தலை, கை, கால் என அவயங்களை காவு கொண்டிருந்தாலும் அடிச் சட்டங்களை வைத்து அவர்கள் பாரதியா, அண்ணாவா, காந்தியா என அறிந்து கொள்ள முடியும். அறிஞர் பெருமக்களை மொத்த சமூகத்தின் பிரதிநிதிகள் என்பது அங்கு வெகுவாகப் பொருந்தியது. கையிழந்து, தலையிழந்து, காயமுற்று…
வன்னியில் அக்கராயன் பகுதியில் ஒரு சிலையுண்டு. அது அறிஞர் அண்ணாவினது. அண்ணாசிலையடி என்பதே அவ்விடத்தின் காரணப் பெயர். யாழ்ப்பாணத்தைப் போல் அல்லாமல் வன்னிப் பகுதியில் இவ்வாறான சிலைகளை நான் கண்டது அரிது. அல்லது இல்லை. அக்கராயனை சிறிலங்கா இராணுவத்தினர் அண்மையில் கைப்பற்றிய செய்தியறிந்த போது அண்ணா சிலை குறித்தும் ஏனோ நினைவு வந்தது. வழமையாகவே கண்டதையும் உடைத்தெறியும் பழக்க வழக்கமுள்ள படையினர் அண்ணா சிலையை என்ன செய்திருப்பார்கள் ?
யாழ்ப்பாணத்தில் கிட்டு பூங்காவில் கேணல் கிட்டுவின் சிலை உள்ளேயும், வெளியே யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியனின் சிலையும் இருந்தன. கிட்டு பூங்காவை நாசமாக்கிய படையினர், கிட்டுவின் சிலையையும், கூடவே சங்கிலியனின் சிலையையும் உடைத்தெறிந்திருந்தனர். சங்கிலியன் தமிழன் என்பதைத் தவிர அச்சிலையை உடைப்பதற்கு அவர்களுக்கு வேறு காரணம் ஏதுமில்லை.
அண்ணாவையும் அவ்வாறாகவே அவர்கள் நினைக்கலாம். அல்லது யாரோ ஒரு நாட்டுபற்றாளர் அல்லது மாமனிதர் என்றும் நினைக்கலாம். அல்லது அவர் ஈழத்தமிழருக்காக மனிதச் சங்கிலி நடாத்திய கட்சியின் ஆரம்ப காலத்தவர் என யாரேனும் காட்டிக் கொடுக்கலாம். எது எப்படியோ, அண்ணா சிலையிருந்த இடத்தில் சிதைவுகளையோ, அல்லது அவயங்களை இழந்த அடையாளம் காணப்படாத ஒரு சிலையையோ, அல்லது அதிஸ்டவசமாக முழுமையான அண்ணா சிலையினையோ, மூலோபாயங்களுக்கான முன் நிபந்தனைகள் முழுமையடையும் ஒரு காலத்தில், காணத்தானே போகின்றோம்.
000
பிழைக்கப் போன இடத்தில் ஈழத்தமிழர்கள் நாடு கேட்பது நியாயமா என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் களைத்தாயிற்று. இன்றொரு பதிவு கண்ணில் பட்டது. அதில் பதிவர் இவ்வாறு எழுதுகிறார்.
அவரது நண்பர் ஒருவர் ஈழத்தமிழர்கள் குறித்து பேசுகையில் பிழைப்புத் தேடி போன இடத்தில் நம் தமிழர்கள் எதற்காக நாடு கேட்கிறார்கள் என சலித்துக் கொண்டதாகவும் அதற்கு தான் முழுமையான உண்மையான வரலாற்றை அவருக்கு எடுத்து கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மகிழ்ச்சியாயிருந்தது. கொஞ்சமேனும் கொண்டு சேர்த்திருக்கிறோம் என்ற நிம்மதியினூடே அவர் சொன்ன வரலாற்றுக் கதையை வாசித்தவுடன் சப் என்று போய் விட்டது. அந்த வரலாற்று் கதை இதுதான்.
ஈழம் யாருமற்ற தீவாகவே முன்னர் இருந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஒரு தமிழ் மீனவனே அதனை முதலில் கண்டுபிடித்திருக்க வேண்டும். சிங்களவர்கள் வட நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்றவர்கள். ஆனால் வட நாட்டை விட அருகில் இருக்கும் ராமேஸ்வரத்திலிருந்து தமிழர்களே முதலில் அங்கு சென்றிருக்க வேண்டும். ஆகவே அவர்களே இலங்கையில் அதிக உரித்துடையவர்கள்.
அதுவொரு நகைச்சுவைப் பதிவா என அங்குமிங்கும் தேடினேன். இல்லை. அன்பர் சீரியசாகவேதான் எழுதியிருக்கிறார்.
ரூம் போட்டு யோசிப்பார்கள் போல! ஸ்ப்பா முடியல…
இலங்கையை கண்டுபிடித்த அந்த ராமேஸ்வரத்து தமிழ்க் கொலம்பஸ் யாரப்பா
Share/Save
Tags:
அண்ணா,
துயிலுமில்லம்,
நடுகற்கள்,
மாவீரர்,
வந்தேறுகுடிகள்
இவ்விடுகையோடு தொடர்புடைய வேறும் சில
- தொடர்புற்ற இடுகைகள் இல்லை